பொருட்பால் - கல்லாமை

Shares
facebook sharing button Share
twitter sharing button Tweet
snapchat sharing button Snap
email sharing button Email
sharethis sharing button Share

1. அரங்குஇன்றி வட்டாடி அற்றே நிரம்பிய
நூல்இன்றிக் கோட்டி கொளல்.

விளக்கம் : நிரம்பிய நூலறிவு இல்லாமல் கற்றவர் அவையிலே சென்று ஒருவன் பேசுதல், அரங்கம் இழைக்காமலே வட்டாடினால் போன்ற அறியாமையான செயல் ஆகும்.

2. கல்லாதான் சொற்கா முறுதல் முலைஇரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றற்று.

விளக்கம் : கல்லாதவன், தானும் அவையிற் பேசவேண்டும் என்று விரும்புதல், முலைகளிரண்டும் இல்லாதவளான பெண் பெண்மையை விரும்புதல் போன்ற அறியாமை ஆகும்.

3. கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின்.

விளக்கம் : கற்றவர்களின் முன்பாகச் சென்று சொல்லாடாதிருந்தால், கல்லாதவர்களும், அந்த அளவுக்கு மிகவும் நல்லவர்களாகவே கற்றவரால் கருதப்படுவர்.

4. கல்லாதான் ஒட்பம் கழியநன்று ஆயினும்
கொள்ளார் அறிவுடை யார்.

விளக்கம் : கல்லாதவனது அறிவு சில சமயங்களிலே மிகவும் நன்றாயிருந்தாலும், அறிவுடையவர்கள் அதனை நன்றென்று ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

5. கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்.

விளக்கம் : கல்லாத ஒருவன், தன்னையும் கற்றவர்போல மதித்துக் கொண்டு சொல்லாடினால், அவனுக்கு இயல்பாக உள்ள மதிப்பும் கெட்டுப் போய்விடும்.

6. உளர்என்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களர்அனையர் கல்லா தவர்.

விளக்கம் : உயிரோடு இருக்கின்றார் என்னும் அளவினரே அல்லாமல், எந்தப் பயனும் இல்லாத களர்நிலத்தைப் போன்றவர்களே கல்லாதவர் ஆவர்.

7. நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்பாண் புனைபாவை அற்று.

விளக்கம் : நுட்பமாகவும் சிறப்பாகவும் நுழைந்து கற்ற அறிவுநலம் இல்லாதவனின் உடல் அழகு, மண்ணால் அழகாகச் செய்த ஒரு பாவையின் உடல் அழகு போன்றதே

8. நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு.

விளக்கம் : கல்வியறிவு உடைய நல்லவரிடம் உள்ளதான வறுமையை விடக் கல்லாதவரிடம் சேர்ந்த அளவற்ற செல்வமானது பெரிதும் துன்பம் தருவதாகும்.

9. மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்துஇலர் பாடு.

விளக்கம் : மேலான குடியிலே பிறந்தவராயினும், கல்லாத மடமையாளர், தாழ்ந்த குடியிலே பிறந்தும் கற்றவரைப் போலப் பெருமை இல்லாதவர் ஆவர்.

10. விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்.

விளக்கம் : அறிவு விளங்கும் நூல்களைக் கல்லாதவர்கள், மக்களை நோக்க விலங்குகள் இழிந்தவை ஆவதுபோல, கற்றவரைக் கருதத் தாமும் இழிந்தவர் ஆவர்.

1

Shares
facebook sharing button Share
twitter sharing button Tweet
snapchat sharing button Snap
email sharing button Email
sharethis sharing button Share