1. வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே ஆகும்.
விளக்கம் : வஞ்சக மனத்தினது பொய்யான நடத்தையைக் கண்டு, அவனுடம்பாக அமைந்து விளங்கும் ஐந்து பூதங்களும் தம்முள்ளே சிரித்துக் கொண்டிருக்கும்.
2. வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்நெஞ்சம்
தானறி குற்றப் படின்.
விளக்கம் : தன் நெஞ்சம் தான் அறிந்து செய்யும் குற்றத்திலேயும் ஈடுபடுமானால், அத்தகையவனது வானளாவிய தவத் தோற்றமும் என்ன பயனைச் செய்யும்?
3. வலியில் நிலைமையான் வல்லுருவன் பெற்றம்
புலியின்தோல் போர்த்தமேய்ந் தற்று.
விளக்கம் : மனவலிமை இல்லாதவன் மேற்கொள்ளும் வலிய தவத்தோற்றம், பசு. புலியின் தோலைப் போர்த்துச் சென்று பயிரை மேய்ந்தாற் போன்றதாகும்.
4. தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.
விளக்கம் : தவக் கோலத்திலே மறைந்து கொண்டு, தீய செயல்களைச் செய்தல், கொலை குறித்த வேடன் புதரின் பின் மறைந்து நின்று பறவைகளை வலைவீசிப் பிடிப்பது போன்றதாகும்.
5. பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று
ஏதம் பலவும் தரும்.
விளக்கம் : பற்றுகளை விட்டேம் என்பவரது பொய்யான தீய ஒழுக்கம், என்ன செய்தோம்? என்று வருந்தும்படியான பலவகைத் துன்பங்களையும் தரும்.
6. நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல்.
விளக்கம் : நெஞ்சிலே ஆசையை விடாதரவர்களாய். வெளியே ஆசை அற்ற ஞானிகளைப் போலக் காட்டி மக்களை வஞ்சித்து வாழ்பவரினும் கொடியவர் எவருமே இலர்.
7. புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
மூக்கிற் கரியார் உடைத்து.
விளக்கம் : புறத்தோற்றத்திலே குன்றிமணியின் நிறம்போலச் செம்மையான தோற்றம் உடையவர் என்றாலும் , உள்ளத்தில் குன்றிமணியின் மூக்குபோலக் கரியவரும் உள்ளனர்.
8. மனத்தது மாசாக மாண்டார்நீர் ஆடி
மறைந்தொழுகும் மாந்தர் பலர்.
விளக்கம் : மனத்துள்ளே இருப்பது குற்றமாகவும், மாண்பு உடையவர் போல நீராடி, மறைவாக வாழ்வு நடத்தும் மாந்தர்களும் இந்த உலகிற் பலர் ஆவர்.
9. கணைகொடிது யாழ்கொடு செவ்விதுஆங்கு அன்ன
வினைபடு பாலாற் கொளல்.
விளக்கம் : நேரானாலும் அம்பு கொடுமை செய்வது: வளைவானாலும் யாழ்க்கோடு இன்னிசை தருவது: மனிதரையும் இப்படியே அவரவர் செயல்தன்மை நோக்கியே அறிதல் வேண்டும்.
10. மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்.
விளக்கம் : உலகம் பழித்த தீயசெயல்களை ஒழித்துவிட்டால் உயர்வு தானே வரும். உயர்வு கருதி மயிரை மழித்துக் கொள்வதும், நீள வளர்த்தலும் செய்ய வேண்டாம்.
1