1. பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.
விளக்கம் : அறிவுடைய குழந்தைகள் தவிர நான் அடைய வேண்டியது வேறு இல்லை.
2. எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.
விளக்கம் : பழி உருவாக்காத பண்புடைய குழந்தைகளைப் பெற்றால் எழுகின்ற பிறப்புக்கு எல்லாம் தீயவை தீண்டாது.
3. தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்.
விளக்கம் : தான் பெற்றது என்பதே மக்கள்; அவர்கள் பெற்றது அவரவர் வினையால் வரும்.
4. அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.
விளக்கம் : தன் குழந்தை சின்ன கைகளால் கரைத்த கூழ், அமிழ்தைவிடவும் சிறந்த சுவையுடையதாக இருக்கும்.
5. மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.
விளக்கம் : குழந்தைகள் தன்னை தீண்டுவது உடலுக்கு இன்பம். மேலும் அவர்கள் சொல் கேட்பது காதுக்கு இன்பம்.
6. குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.
விளக்கம் : மழலைகளின் சொற்களைக் கேட்காதவர்கள்தான் இசைக்கருவிகளில் இருந்து வரும் இசை இன்பமானது என்று சொல்வார்கள்.
7. தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.
விளக்கம் : தகப்பன் தன் குழந்தைகளுக்கு செய்ய வேண்டிய நன்றி, ஞானக் கூட்டங்களில் முன்னோடியாக இருக்கச் செய்வது.
8. தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.
விளக்கம் : தன்னைவிட தனது குழந்தைகள் அறிவுபெறுவது, உலகின் அனைத்து உயிருக்கும் இனிமையானதாகும்.
9. ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.
விளக்கம் : தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் என பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனை பெற்றக் காலத்தில் உற்ற மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வாள்.
10. மகன் தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்லெனும் சொல்.
விளக்கம் : மகன் தன் தந்தைக்குச் செய்யத் தக்க கைம்மாறு, இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்.
1