பொருட்பால் - புல்லறிவாண்மை

Shares
facebook sharing button Share
twitter sharing button Tweet
snapchat sharing button Snap
email sharing button Email
sharethis sharing button Share

1. அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மைஇன்மையா வையாது உலகு.

விளக்கம் : அறிவில்லாத தன்மையே, வறுமையுள் கொடிய வறுமை. பிற, பொருள் இல்லாத வறுமையை உலகம் நிலையான வறுமையாக ஒருபோதும் கருதாது.

2. அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும்
இல்லை பெறுவான் தவம்.

விளக்கம் : அறிவில்லாத ஒருவன், மனமகிழ்ச்சியோடு ஒரு பொருளை ஒருவனுக்குத் தருவதென்பது, பெறுவானது தவத்தின் பயனே அல்லாமல், வேறு எதனாலும் இல்லை.

3. அறிவிலார் தாம்தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்கும் செய்தல் அரிது.

விளக்கம் : அறிவில்லாதவர், தமக்குத் தாமே செய்து கொள்ளும் வருத்தம் தரக்கூடிய துன்பங்கள், அவரது பகைவராலும் அவருக்குச் செய்ய முடியாதவையாக இருக்கும்.

4. வெண்மை எனப்படுவது யாதெனில் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு.

விளக்கம் : அறியாமை என்று சொல்லப்படுவது என்னவென்றால், அறிவில்லாதவனும் "தான் அறிவுடையவன்" என்று நினைத்துச் செருக்கு அடைதலாகும்.

5. கல்லாத மேற்கொண்டு ஒழுகல் கசடற
வல்லதூஉம் ஐயம் தரும்.

விளக்கம் : தான் கல்லாத ஒரு செயலையும், அறிவில்லாததால் துணிந்து செய்யத் தொடங்குதல், எதையும் குறையில்லாமல் செய்யவல்ல செயல்களிலும், ஐயத்தைத் தரும்.

6. அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
குற்றம் மறையா வழி.

விளக்கம் : தம்மிடத்திலே உள்ள குற்றங்கள் மறையாத போது, உடல் முழுவதும் ஆடைகளாலே மறைத்துக் கொண்டு, நல்லவர் போலத் திரிதல், அறிவற்ற தன்மை ஆகும்.

7. அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு.

விளக்கம் : அரியவான மறைகளைக் கற்றும், உண்மைப் பொருளை அறியாமல் சோர்வு அடைகின்ற அறிவில்லாதவன், தனக்குத் தானே பெரிய தீமைகளைச் செய்து கொள்வான்.

8. ஏவவுஞ் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஒம் அளவுமோர் நோய்.

விளக்கம் : அறிவுடையோர் "இன்னின்னபடி செய்க" என்று ஏவிய போதும், அதன்படி செய்யமாட்டாதவன், தானும் தெளியாதவன், உயிர் போகுமளவும் துன்பம் அடைவான்.

9. காணாதாற் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறு.

விளக்கம் : தன் அறியாமையால், தான் கண்டபடியே பிறருக்குக் காட்டுபவன், தானும் உண்மை காணாதவன், என்றுமே தான் கண்டபடி காண்பவனாகவே விளங்குவான்.

10. உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும்.

விளக்கம் : உலகத்தார் "உண்டு" என்னும் ஒரு பொருளை, தன்னுடைய அறியாமையாலே "இல்லை" என்று சொல்லுபவன், உலகத்தாரால் பேயாகக் கருதி ஒதுக்கிவைக்கப்படுவான்.

1

Shares
facebook sharing button Share
twitter sharing button Tweet
snapchat sharing button Snap
email sharing button Email
sharethis sharing button Share