ஒரு காட்டில் பல குரங்கள் கூட்டமாக வசித்து வந்தன. குளிர் காலத்தில் ஒரு நாள் மிகவும் கடுமையான குளிராக இருந்தது குரங்குகளால் குளிரைத் தாங்க முடியவில்லை. கொஞ்சம் நெருப்பு கிடைத்தால் சருகுகளைப் போட்டுத் தீ மூட்டி குளிர் காயலாம் என்று கிழக்குரங்கு ஒன்று கூறியது. நெருப்புக்கு எங்கே போவது என்று குரங்குகள் யோசித்துக்கொண்டிருந்தபோது ஒரு மின்மினிப் பூச்சி 'பளிச் பளிச்' என்று மின்னியவாறு பறந்து சென்று கொண்டிருந்தது. அதைக் கண்ட ஒரு குரங்கு அதோ நெருப்பு போகிறது என்று கூறியது. மற்றொரு குரங்கு அந்த மின்மினிப்பூச்சியைப் பிடித்து வந்து தரையில் போட்டது.
மற்ற குரங்குகள் சுற்றிலும் கிடந்த குப்பைக் கூளங்களைச் சேகரித்து வந்து மின்மினிப்பூச்சி மீது போட்டது. பிறகு குரங்குகள் நெருப்பு கொளுந்து விட்டு எரியப் போகிறது என எதிர்பார்த்து சூழ்ந்து அமர்ந்து கொண்டன.
ஆனால் தீ எரியும் வழியில்லை. பிறகு குரங்குகள் வாயினால் ஊதி குப்பையை எரிய
1
வைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தன. அருகே ஒரு மரத்தில் அமர்ந்து குரங்குகளின் கோமாளிக் கூத்தைக் கவனித்துக் கொண்டிருந்த சுகிதா என்ற ஒரு பறவை கலகலவென சிரித்துக் கொண்டே மரத்தை விட்டு கீழே இறங்கி வந்தது.
பிறகு குரங்குகளை நோக்கி நண்பர்களே மின்மினிப் பூச்சியை நெருப்பு என்று எண்ணிக் கொண்டு தீ மூட்ட வீண் ஆசை கொள்கிறீர்கள் என்னதான் வாயில் ஊதினாலும் மின்மினிப் பூச்சியிடமிருந்து நெருப்பு வரவே வராது எனவே இந்த வீண் வேலையை விட்டு விடுங்கள் என்று அறிவுரை சொன்னது. உனக்கு ஒன்றும் தெரியாது. வாயை மூடிக் கொண்டு உன் வேலையை பார்த்துக்கொண்டு போ என்று கூறி விட்டு குரங்குகள் மறுபடியும் குப்பையை ஊதி தீ மூட்ட முயற்சி செய்தன. பறவை குரங்குகளின் முட்டாள் தனத்தை எண்ணித் திரும்பத்திரும்ப புத்திமதி சொல்லிக் கொண்டே இருந்தது. இதனால் கோபமுற்ற குரங்குகள் எல்லாம் சேர்ந்து அந்த பறவையைப் பிடித்து அடித்துக் கொன்று விட்டது.
2